ஏற்கனவே இருந்ததுபோல் வசூல் மையங்களிலேயே ரூ.5 ஆயிரம் வரை மின் கட்டணம் வசூலிக்க வேண்டும்; நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

ஏற்கனவே இருந்ததுபோல் வசூல் மையங்களிலேயே ரூ.5 ஆயிரம் வரை மின் கட்டணம் வசூலிக்க வேண்டும்; நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-06-13 21:15 GMT

பெரம்பலூர் நான்குச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமையில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கோட்ட செயற்பொறியாளர்கள் சேகர், அசோக்குமார் மற்றும் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் மின் நுகர்வோர் சார்பில் மனு அளித்தனர். அந்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் தயார் நிலை பதிவேட்டில் பதிவு செய்து காத்திருக்கும் 540 விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுபோல் ரூ.5 ஆயிரம் வரையிலான மின் கட்டணத்தை, மின்வாரிய ஊழியர்களை கொண்டு வசூல் மையங்களிலேயே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய மின் இணைப்பு, வீட்டு மின் இணைப்புக்காக விண்ணப்பித்தவர்களிடம் மின் இணைப்பு வழங்கும் கால அவகாசம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். காற்று பலமாக வீசும் காலங்களில் மின் இணைப்புகள், மின் கம்பங்கள், கம்பிகளில் சேதம் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மின் மீட்டர்கள் பழுதடைந்த 7 நாளில் மாற்றித்தர வேண்டும். தடையில்லாத மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்