கைவினை கலைஞர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்

கைவினை கலைஞர்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார் .

Update: 2022-11-05 18:45 GMT

கைவினை கலைஞர்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார் .

விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் ஏற்கனவே தனிநபா் கடன், சுய உதவிக்குழுக்கடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை குறைந்த வட்டி வீதத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகம் கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தில், கடன் தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். இதில் திட்டம்-1 ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98 ஆயிரக்கு மிகாமலும் மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

கடனுதவி

இத்திட்டத்தில் பெண்களுக்கு 4 சதவீத வட்டி வீதத்திலும், ஆண்களுக்கு 5 சதவீத வட்டி வீதத்திலும் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். திட்டம்-2ன் கீழ், பயன்பெற ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் பெண்களுக்கு 5 சதவீத வட்டி வீதத்திலும், ஆண்களுக்கு 6 சதவீத வட்டி வீதத்திலும் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரர் கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் மூலம் 90 சதவீத கடன் தொகையும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 5 சதவீத கடன் தொகையும் மற்றும் விண்ணப்பதாரா் பங்குத்தொகை 5 சதவீதமும் சேர்த்து கடன் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கடன் திரும்ப செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்