வேலைவாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா?

2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 9 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை சர்வதேச நிதி அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது. பெருகிவரும் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு இந்த யோசனையை அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

Update: 2022-11-27 18:26 GMT

பிரதமர் மோடி அதிரடி

'மத்திய அரசு பணிகளில் 18 மாதங்களில் 10 லட்சம் பேர் நியமனம் செய்யப்படுவார்கள்' என்று அப்போது பிரதமர் மோடி அதிரடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி ரெயில்வே துறையில் 2 லட்சத்து 93 ஆயிரம், பாதுகாப்புத்துறையில் 2 லட்சத்து 63 ஆயிரம், உள்துறையில் 1 லட்சத்து 43 ஆயிரம், தபால்துறையில் 90 ஆயிரம், வருவாய்த்துறையில் 80 ஆயிரம், கணக்கு தணிக்கைத் துறையில் 26 ஆயிரம், சுரங்கத்துறையில் 7 ஆயிரம், அணுசக்தி துறையில் 9 ஆயிரத்து 400, நீர்வளத்துறையில் 3 ஆயிரத்து 800 என மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 9 லட்சத்து 79 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி., ரெயில்வே தேர்வு வாரியம் போன்றவைகள் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த மாதம் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக கடந்த 22-ந் தேதி அன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் முகாமையும் அவர் தொடங்கி வைத்தார்.

மு.க.ஸ்டாலினின் பெருமிதம்

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பில் அதிக அக்கறை காட்டி வருகிறது. பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றன.

தமிழக போலீஸ்துறையில் 3 ஆயிரத்து 552 போலீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ளது.

படித்த இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் பணியை தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு மட்டும் 419 முகாம்கள் நடத்தப்பட்டு 68 ஆயிரத்து 14 பேர் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள்.

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் கடந்த மாதம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசும்போது, 'தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது' என்று பெருமிதத்துடன் கூறினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விரைவில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

இதுபோன்ற மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மூலம் வேலை இல்லாத் திண்டாட்டம் குறைந்து இருக்கிறதா? வேலை வாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா? என்பவை பற்றி பட்டதாரிகளும், வேலைதேடும் இளைஞர்களும் வெளிப்படுத்திய கருத்துகளைப் பார்ப்போம்.

ஒப்பந்த தொழிலாளர்கள்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் பாரதிதாசன்:- தற்போது மத்திய-மாநில அரசுகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விஷயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்துவிட்டு வேலை வாய்ப்பு இன்றி இருக்கிறார்கள். இவர்களுக்கு அரசுவேலைவாய்ப்பு என்பது யானை பசிக்கு சோள பொறி கொடுப்பது போல் உள்ளது. படித்த இளைஞர்களுக்கு தகுந்தார்போல் தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களை ஏற்படுத்தவில்லை. மேலும் அனைவருக்கும் அரசு வேலை வாய்ப்பு கொடுக்க முடியாது என்றாலும், அரசு தனியார் நிறுவனங்களின் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு தொழிலாளர் சட்டங்களில் தகுந்த விதிகளை கடைப்பிடித்து தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று அரசு கட்டுப்பாடுகளை விதித்தால், மேலும் ஒப்பந்த தொழிலாளர்களே இல்லை என்பதை கொண்டு வந்தால் அநேக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

பணி நியமன ஆணை

தா.பழூரை சேர்ந்த கல்லூரி மாணவன் ராகுல் ராஜா:- மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்ப ரீதியிலான படிப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைகளை வழங்கி வருகிறார்கள். அதேபோல் கலை அறிவியல் சார்ந்த படிப்பு முடித்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் மூலம் பணி நியமன ஆணை கொடுப்பதும், பெரும்பாலும் தனியார்துறை சார்ந்து இருக்கிறது. அரசு துறை வேலைகள் சார்ந்த அறிவிப்புகள் அதிகளவில் இருப்பதில்லை. பட்ட, பட்டய படிப்புகள் முடித்து வெளிவரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது வேலை வாய்ப்பு மிகவும் சொற்பமாகவே இருக்கிறது. எனவே அரசு துறை வேலை வாய்ப்புகள் குறித்த அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு

தா.பழூரை சேர்ந்த கல்லூரி மாணவி வானதி:- மத்திய, மாநில அரசுகள் வேலை வாய்ப்புகள் வழங்குவதாக நிகழ்ச்சிகள் நடத்தி பெரியளவு எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக அறிவிப்புகள் வெளியாகின்றன. அதுபோல் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் புள்ளிவிவரங்களில் அதிகளவு எண்ணிக்கையில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு இல்லாமல் சுற்றித்திரியும் இளைஞர்கள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறார்கள். ஒரு வேலை தனியார் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டாலும், குறுகிய காலங்களில் அந்த வேலைகளில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். வழங்கப்படும் பணி வாய்ப்புகள் நிரந்தரமானதாக இருப்பதில்லை. எனவே மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புகள் வெளிப்படையானதாகவும், அதே நேரத்தில் நீண்டகால பயன்பாட்டுக்கான வேலைவாய்ப்பு திட்டங்களாகவும் இருக்க வேண்டும்.

கானல்நீர் போன்ற கதை தான்

அரியலூரை சேர்ந்த கல்வியாளரும், போட்டி தேர்வு ஆலோசகருமான கே.எம்.ராஜேஷ்:-

சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடி கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ஒன்றிய அரசு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார். அதேபோல் தமிழக அரசிலும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, 2, 2ஏ தேர்வுகளுக்கான போட்டி தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. அதேபோல நேற்று காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆசிரியர் தேர்வு வாரியம் சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்தி கொடுக்கிறது. சமீபத்திய தரவுகள் கூட தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்திற்கும் மேல் உள்ளனர் என்று கூறப்படுகிறது. எனினும் சராசரியாக ஆண்டிற்கு தமிழகளவில் 20,000-க்கும் குறைவான பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. இதேபோல தான் மத்திய அரசு. லட்சக்கணக்கான இளைஞர்கள் உயர்கல்வி படித்து விட்டு இருக்கின்றனர். அனைவருக்கும் அரசு பணி என்பது கானல் நீர் போன்ற கதை தான். உயா் கல்வி படித்த அனைவருக்கும் அரசு பணியிடம் கொடுப்பதும் இன்றைய அளவில் சாத்தியம் இல்லை. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நான் முதல்வன் திட்டமானது உயர்கல்வி வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மேலும் செம்மையாக்கி அதிக அளவிலான தொழில்நுட்ப பாடங்களையும் தொழில் நுட்ப பயிற்சிகளையும் கொடுத்து தனியார் துறையில் வேலை வாய்ப்புகளை பலருக்கு வழங்க உதவி செய்யலாம். இன்றைய சூழலில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளது. அதற்குரிய திறன் பயிற்சி பள்ளி அளவிலும், கல்லூரி அளவிலும் வழங்கப்பட்டால் நிறைய இளைஞர்களுக்கு பயன்படும். எனவே அரசு பணி என்பது அனைவருக்கும் வழங்குவது சாத்தியக்கூறு இல்லை. அதேபோல அரசு பணிக்கு படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பள்ளி, கல்லூரி படிக்கும் போதே போட்டித்தேர்வு கூறிய பாட புத்தகங்களையும் திட்டமிட்டு படித்தால் எளிதில் அரசு பணியை பெற முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐ.டி. துறையிலும்...

மத்திய-மாநில அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கங்கள் முனைப்பு காட்டி வருவது படித்த இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டால் அரசு துறைகளில் சுணக்கம் குறைந்து பணிகள் வேகம் எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் பிறந்துள்ளது.

கொரோனாவால் ஆட்டம் கண்ட தனியார் துறையும் தற்போது ஆட்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது. ஐ.டி. துறையில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று 'இன்போசிஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் அறிவித்திருப்பது என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்