'போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்' - தமிழக அரசு அறிவிப்பு

போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2024-09-08 22:38 GMT

சென்னை,

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள 6 மாத கால இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் பயிற்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி. ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்கள் இயங்கி வருகிறது.

அந்த வகையில், கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று, புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை 6 மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 1-1-2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.

பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக 10-9-2024 முதல் 24-9-2024 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 25954905 மற்றும் 044 - 28510537 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

எஸ்.எஸ்.எல்.சி.யில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்