அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும் - ஜெயக்குமார்

அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-12 10:03 GMT

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்பான அண்ணாமலை கருத்துக்கு, ஜெயக்குமார் பதிலடி கொடுத்து பேசியதாவது:-

பாஜகவில் மாநில தலைமைப் பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று பேசியது இல்லை. அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். ஒரு மாநில தலைவராக இருப்பதற்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் அண்ணாமலை. ஜெயலலிதா குறித்து அவரின் பேச்சு கண்டிக்கத்தக்கது. கூட்டணி தர்மத்தை மீறி பேசுகிறார் அண்ணாமலை. பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக-பாஜக கூட்டணி தொடரக்கூடாது என்பது போல உள்ளது. கூட்டணி தர்மப்படி இல்லாமல் அண்ணாமலை செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

மோடி மீண்டும் பிரதமராக கூடாது என்ற எண்ணத்திலேயே அண்ணாமலை செயல்படுவது போல் தெரிகிறது. அண்ணாமலையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் கண்டிக்க வேண்டும். அண்ணாமலை கர்நாடகா சென்ற ராசி அம்மாநிலத்தில் பாஜக தோற்றுவிட்டது. தமிழக சட்டமன்றத்துக்குள் 20 வருடங்களாக பாஜகவால் நுழைய முடியவில்லை.

அண்ணாமலையின் செயல்பாடுகள் தொடர்ந்தால் பாஜக கூட்டணியை மறுபரிசீலை செய்ய நேரிடும். எங்கள் (அதிமுக) கூட்டணியில் இருப்பதால் தான் தமிழகத்தில் பாஜகவுக்கு அடையாளம் இருக்கிறது. அண்ணாமலையின் பேச்சால் 2 கோடி அதிமுக தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர். அண்ணாமலைக்கு முன்பு இருந்த பாஜக தலைவர்கள் கூட்டணி தர்மத்தை மீறும் வகையில் பேசியதில்லை. மறைந்த தலைவர் ஜெயலலிதாவை விமர்சித்ததை ஏந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியலில் அதிமுக ஆலமரம், பாஜக வெறும் செடி. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வைத்தால்கூட 30 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனுசனைக் கடிக்கும் கதையாக இருக்கிறது அண்ணாமலையின் செயல். கர்நாடக பாஜக அரசின் ஊழல் தொடர்பாக அண்ணாமலை ஏன் பேசவில்லை?.

அதிமுகவுடன் கூட்டணி - அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை. சட்டசபையில் 4 பாஜக ஏம்.ஏல்.ஏ.க்கள் உள்ளதற்கு காரணம் அதிமுக தான். கூட்டணி தர்மத்தை பாஜக கடைபிடிப்பது நல்லது, இல்லையென்றால் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. இனியும் தொடர்ந்தால் வாங்கி கட்டிக்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்