"அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்..." - தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் சுதீஷ்

2026ல் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவார் என்று தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.

Update: 2024-09-14 12:28 GMT

புதுக்கோட்டை,

எதிர்வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தே.மு.தி.க. 20-வது ஆண்டு எட்டியுள்ளதை முன்னிட்டு கட்சியில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. தே.மு.தி.க. கட்சி 20வது ஆண்டு விழா மற்றும் கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷன் வழங்கியதற்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெறுகிறது. தே.மு.தி.க. நான்கு சட்டமன்றத் தேர்தல், நான்கு நாடாளுமன்ற தேர்தல், மூன்று உள்ளாட்சித் தேர்தல் சந்தித்து வலுவான கட்சியாக உள்ளது.

2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடரும். திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் அது குறித்து ஆலோசனை செய்யப்படும். சிறுவர்களுக்கான வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அனைத்து சிறு கிராமங்களில் கூட கஞ்சா விற்பனை உள்ளது. இதை போல் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். மேற்கு வங்காளத்தில் இயற்றியது போல் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். முதல்-அமைச்சர் அமெரிக்கா சென்று 17 நாட்கள் தங்கி 7 ஆயிரத்து 500 கோடி முதலீடு திரட்டியதாக சொல்கின்றனர். ஆனால் சந்திரபாபு நாயுடு ஏழு நாட்கள் மட்டும் அமெரிக்கா சென்று 33 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டை திரட்டினார். ஏற்கனவே போர்டு நிறுவனம் தமிழகத்தில் இருந்தது தான். அதை மீண்டும் கொண்டு வருகின்றனர்" என்று சுதீஷ் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்