அ.தி.மு.க. பொதுக்குழு நடக்குமா..? - சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Update: 2022-07-06 01:13 GMT

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கொண்டுவர தீர்மானம் இயற்றப்பட உள்ளதாக கூறி, இந்த பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில், அ.தி.மு.க., உறுப்பினர் சண்முகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்து தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி இடைக்கால் தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சண்முகம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர், அ.தி.மு.க.வில் புதிய தீர்மானங்கள் எதுவும் இயற்றக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர்.

ஆனால், அ.தி.மு.க., பொதுக்குழுவில் அவைத்தலைவர் நியமனம் தொடர்பாக புதிய தீர்மானம் இயற்றப்பட்டதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்என்றும் கூறப்பட்டு இருந்தது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கூடிய மனுவை தாங்கள் விசாரிக்க முடியாது என்று நேற்று முன்தினம் நீதிபதிகள் எம்.துரைசாமி,சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க., பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் இயற்றக்கூடாது என்ற தடையை மீறி, தமிழ்மகன் உசேனை அ.தி.மு.க.வின் நிரந்தர அவைத்தலைவராக நியமித்து புதிய தீர்மானத்தை இயற்றியுள்ளனர். அவைத்தலைவர் நியமனமே சட்டவிரோதம் என்ற நிலையில், வருகிற 11-ந்தேதி பொதுக்குழுவை அவர் கூட்டுவதும் சட்டவிரோதம்.

கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். எனவே, அந்த பதவிகளை தன்னிச்சையாக நீக்கிவிட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டுவர முடியாது.

மேலும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் 15 நாட்களுக்கு முன்பாக அனைத்து நிர்வாகிகளுக்கும் முறையாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான எனக்கு ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு நடைபெற உள்ளதாக கடந்த 4-ந்தேதி அன்றுதான் அழைப்பு கிடைத்துள்ளது. எனவே உரிய கட்சி விதிமுறைகளை பின்பற்றாமல் நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

இன்று விசாரணை

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் டெல்லி மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார் முறையிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை இன்று (புதன்கிழமை) விசாரிப்பதாக கூறினார்.

இதன் காரணமாக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்