சிவகிரி அருகே பரிதாபம்; கலவை எந்திரத்தில் சேலை சிக்கியது- தலை துண்டாகி பெண் பலி

சிவகிரி அருகே கலவை எந்திரத்தில் சேலை சிக்கியதால் தலை துண்டாகி பெண் பலியானார்.

Update: 2022-12-06 20:47 GMT

சிவகிரி

சிவகிரி அருகே கலவை எந்திரத்தில் சேலை சிக்கியதால் தலை துண்டாகி பெண் பலியானார்.

கூலி தொழிலாளி

சிவகிரி அருகே உள்ள தலைய நல்லூர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மனைவி பாப்பாயி (வயது 62). கூலி தொழிலாளி.

சிவகிரி அருகே உள்ள ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவர் புதிய வீடு கட்டி வருகிறார்.

இதற்காக கான்கிரீட் போடும் பணி நேற்று நடைபெற்றது. பாப்பாயியின் தங்கை பேரன் சதீஷ் என்பவர் கலவை எந்திரம் வைத்து கான்கிரீட் போடும் வேலை செய்து வருகிறார். அவருடன் நேற்று ஜல்லி அள்ளி கலவை எந்திரத்தில் கொட்டும் வேலைக்காக பாப்பாயி சென்றார்.

தலை துண்டானது

நேற்று காலை 9.30 மணி அளவில் ஜல்லி கற்களை தகர சட்டியில் அள்ளி இயங்கிக்கொண்டு இருந்த கலவை எந்திரத்துக்குள் பாப்பாயி கொட்டினார். அப்போது பாப்பாயின் பின்புறம் தொங்கிக்கொண்டு இருந்த சேலையின் முந்தானை எந்திரத்தின் சுழட்டியில் பட்டு சிக்கியது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் பாப்பாயி இழுத்து கலவை குடுவையின் மேல் பகுதியில் வீசப்பட்டார். அதில் பட்டதும் பாப்பாயின் தலை, கைகள் துண்டானது.

அருகே வேைல செய்துகொண்டு இருந்த தொழிலாளர்கள் அதைப்பார்த்து அதிர்ச்சியில் அலறி துடித்தார்கள்.

கதறல்

உடனே இதுபற்றி சிவகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பாப்பாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கலவை எந்திரத்தில் சிக்கி உயிரிழந்த பாப்பாயிக்கு குமார் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

பாப்பாயியின் உடலை பார்த்து அவர்கள் கதறி துடித்தது காண்பவர்களை கண்கலங்க செய்தது. 

Tags:    

மேலும் செய்திகள்