மோட்டார்சைக்கிளுடன் வாய்க்காலில் விழுந்த வாலிபர்; தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

கோபி அருகே மோட்டார்சைக்கிளுடன் வாய்க்காலில் விழுந்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Update: 2022-10-11 21:52 GMT

கடத்தூர்

கோபி அருகே மோட்டார்சைக்கிளுடன் வாய்க்காலில் விழுந்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

வாய்க்காலுக்குள் விழுந்தார்

கோபி அருகே உள்ள ஏளூரை சேர்ந்தவர் சாரதி என்கிற கோகிலன் (வயது 24). இவர் கோபியில் உள்ள துணிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த உடன் தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவரை புதுக்கரைபுதூரில் உள்ள வீட்டில் விட்டு விட்டு, தன்னுடைய வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

தடப்பள்ளி வாய்க்கால் கரையில் அவர் வந்தபோது திடீரென நிலை தடுமாறி வாய்க்காலுக்குள் மோட்டார்சைக்கிளுடன் விழுந்து விட்டார்.

அந்த வழியாக வந்தவர்கள் இதைப்பார்த்து உடனே கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் நிலைய அதிகாரி (பொறுப்பு) முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வாய்க்கால் தண்ணீரில் தத்தளித்தபடி நீந்திக்கொண்டு இருந்த கோகிலனை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்கள்.

எச்சரிக்கை பலகை

வாய்க்காலின் குறுக்கே உள்ள பாலத்தை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அங்கு எவ்வித எச்சரிக்கை பலகையும் வைக்கவில்லை. இந்த நிலையில்தான் எதிரே வந்த வாகனத்துக்கு வழி விட முயன்ற போது தடுமாறி கோகிலன் வாய்க்காலுக்குள் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.

எனவே பணி நடைபெறும் இடத்தில் எச்சரிக்கை பலகை அல்லது வேகத்தடை அமைக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்