முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு

சங்கராபுரம், தியாகதுருகம் பகுதி முருகன்கோவில்களில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-08-09 18:45 GMT

சங்கராபுரம்

பாலசுப்பிரமணியர் கோவில்

சங்கராபுரம் சன்னதிதெரு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பாலசுப்ரமணியருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான நறுமண பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போல் தேவபாண்டலம் குந்தவேல் முருகர், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான், சங்கராபுரம் பூட்டை சாலை முருகன் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர்

அதேபோல் தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பாலமுருகன் சாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி கிருத்திகை அன்று சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு ஆடி கிருத்திகையையொட்டி நேற்று காலை பாலமுருகன் சாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்