பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறைவிழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-07-25 18:45 GMT

மாணவிக்கு பாலியல் தொல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய மாணவி, கடந்த 10.5.2019 அன்று இரவு தனது வீட்டில் பெற்றோருடன் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான வீரன் (30) என்பவர், அம்மாணவி வீட்டின் பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். உடனே மாணவி எழுந்து கூச்சல் போடவே வீரன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை

இதுகுறித்து மாணவியின் தந்தை, உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வீரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட வீரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்