மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அந்த பெண்ணிடம் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறினார்.

Update: 2024-07-10 11:22 GMT

நாகை,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 59 வயதுமிக்க பெண் ஒருவர் வாரந்தோறும் பாப்பாகோவில் பகுதியில் உள்ள தர்காவுக்கு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று தர்காவுக்கு சென்ற அவர் வீட்டுக்கு செல்வதற்காக ஆட்டோவுக்கு காத்திருந்தார்.

அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அந்த பெண்ணிடம் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறினார். அவரை நம்பி அந்த பெண்ணும் மோட்டார் சைக்கிளில் அவருடன் சென்றார். அப்போது அவர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக புதுச்சேரி மெயின் ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்தார். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.

கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் அடைந்த அந்த பெண்ணுக்கு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் தொல்லை அளித்த நபரை தேடி வந்தனர்.

இதுதொடர்பான விசாரணையில் மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தது பாப்பாக்கோவில் அருகே உள்ள பெரிய நரியங்குடி பகுதியை சேர்ந்த சலூன் கடைக்காரர் குமரவேல் (வயது36) என்பது தெரியவந்தது. நேற்று சிக்கல் கடைத்தெருவில் நின்றிருந்த குமரவேலுவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்