ஸ்கூட்டர் மீது தனியார் பஸ் மோதி நர்சு பலி

வேலூரில் ஸ்கூட்டர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் தாய் கண்முன்னே நர்சு பலியானார்.

Update: 2022-07-23 12:34 GMT

வேலூர்

வேலூரில் ஸ்கூட்டர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் தாய் கண்முன்னே நர்சு பலியானார்.

நர்சு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பிச்சனூர் காளியம்மன்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. மேஸ்திரி. இவரது மனைவி பிரேமா (வயது 42). இவர்களது மகள் திவ்யா (21) சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக வேலைபார்த்து வந்தார். நேற்று இருவரும் சென்னையில் இருந்து குடியாத்தம் நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை பிரேமா ஓட்டினார். பின்னால் திவ்யா அமர்ந்திருந்தார்.

வேலூர் ரங்காபுரம் போக்குவரத்து மண்டல அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் பஸ் ஸ்கூட்டர் மீது எதிர்பாராத விதமாக உரசியதில் இருவரும் கீழே விழுந்தனர். அதில் திவ்யா பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தூக்கி வீசப்பட்ட பிரேமா படுகாயமடைந்தார்.

போலீசார் விசாரணை

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரேமாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் திவ்யாவின் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்