திம்பம் மலைப்பாதை தடுப்புச்சுவரில் நடந்து சென்ற சிறுத்தைப்புலி

தடுப்புச்சுவரில் சிறுத்தைப்புலி சிறிது நேரம் அங்கும் இங்கும் நடமாடியது.

Update: 2024-06-09 13:27 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலிகள், யானைகள், மான்கள், கரடிகள், காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மேலும் பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகே அடர்ந்த வனப்பகுதியில் இருந்து 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை தொடங்குகிறது. இந்த மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைப்புலி நடமாடி வருகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச்சுவரில் ஒரு சிறுத்தைப்புலி நடந்து சென்றது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து பீதியடைந்தனர். மேலும் தங்களுடைய வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டனர். இதற்கிடையே வாகன ஓட்டி ஒருவர் தன்னுடைய செல்போனில் சிறுத்தைப்புலியை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தார்.

சிறிது நேரம் தடுப்புச்சுவரில் அங்கும் இங்கும் நடமாடிய சிறுத்தைப்புலி மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. அதன்பின்னரே வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர். சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்