திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

கவியரசி பயோமெடிக்கல் படித்து இருந்தார்.

Update: 2024-07-10 12:23 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சின்னபுனல்வாசலை சேர்ந்த அழகுவேல் மகன் பிரதீஷ்குமார் (வயது 30). என்ஜினீயர். பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா உலகங்காத்தானை சேர்ந்த வேலு மகள் கவியரசி (24) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கவியரசி பயோமெடிக்கல் படித்து இருந்தார். தற்போது 5 மாத கர்ப்பமாக இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு கவியரசிக்கும், கணவர் வீட்டில் உள்ளவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. திடீரென தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு கவியரசி வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதவை தட்டிபார்த்தனர். கதவு திறக்கப்படவில்லை. உடனே கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் கவியரசி பிணமாக கிடந்துள்ளார்.

தகவல் அறிந்த கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கவியரசி உடலை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கவியரசி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க்கோரி கவியரசியின் உறவினர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கவியரசி தாய் அருந்ததி போலீசாரிடம், எனது மகளிடம் பிரதீஷ்குமார், அவருடைய தாய் தங்கமணி, நாத்தனார் பிரதீபா ஆகிய 3 பேரும் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். அதனாலேயே எனது மகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளாள்.

மேலும் அவள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் வரும் போது அவளது உடல் தரையில் படுக்க வைத்த நிலையில் இருந்தது. எனவே கவியரசி சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக பிரதீஷ்குமார், அவருடைய தாய், அக்காள் ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அவர்களிடம் கவியரசி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் உறுதி அளித்தார். அதன்பிறகு உறவினர்கள் சம்மதத்துடன் கவியரசி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து கவியரசி சாவு தொடர்பாக பிரதீஷ்குமார், அவருடைய தாய் தங்கமணி, அக்காள் பிரதீபா ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் திருமணம் ஆகி 6 மாதங்களே ஆவதால் கவியரசு சாவு குறித்து உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்