4 கவுன்சிலர் பதவிக்கான வாக்குப்பதிவு

மதுரை மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் 4 கவுன்சிலர் பதவிக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

Update: 2022-07-09 20:57 GMT

திருப்பரங்குன்றம்

மதுரை மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் 4 கவுன்சிலர் பதவிக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

வாக்குப்பதிவு

மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் 4 கவுன்சிலர் பதவிக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட துவரிமான் ஊராட்சியில் துணைத்தலைவராக லட்சுமணன் இருந்து வந்தார். இவர் 4-வது வார்டு உறுப்பினரான தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்தநிலையில் லட்சுமணன் இறந்து போனார். இதைதொடர்ந்து 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் திறவுகோல் சின்னத்தில் தெய்வம், சீப்பு சின்னத்தில் பால்பாண்டி ஆகிய 2 பேர் போட்டியிட்டனர்.

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ராமர் தலைமையிலும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் முன்னிலையிலும் வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் வாக்கு 510-க்கு 372 வாக்குகள் பதிவானது. இதில் ஆண் வாக்காளர்கள் 182 பேரும், பெண் வாக்காளர்கள் 190 பேரும் ஓட்டுபோட்டனர்.

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம்

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நல்லமரம் ஊராட்சி 3-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த வார்டில் 146 வாக்குகள் உள்ளது. இந்த வார்டுக்கு பிருத்யும்னன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த வார்டுக்கு நேற்று நடந்த இடைத்தேர்தலில் 129 வாக்குகள் பதிவாகியது. முன்னதாக வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு வெப்பமானி பரிசோதனை, கையுறை, மற்றும் முக கவசம் ஆகியவை வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு சரோஜா தலைமையில் போலீசார் செய்திருந் தனர்.

மேலும் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சின்னப்பூலாம்பட்டி ஊராட்சியில் 1-வது வார்டுக்கு செல்வம், எல்.கொட்டாணிபட்டி ஊராட்சியில் 3-வது வார்டுக்கு முத்துமாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கோவிலாங்குளம் ஊராட்சி

மேலூர் அருகே மேலவளவு ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மேலவளவு ஊராட்சி மன்ற துணை தலைவியாகவும் பதவி வகித்தவர் சங்கீதா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தீ விபத்தில் உயிரிழந்தார். இதனால் காலியாக இருந்த அந்த 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. மேலவளவு அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வார்டில் மொத்தமுள்ள 494 வாக்குகளில் 320 வாக்குகள் பதிவாகியது. வருகிற 12-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா முன்னிலையில் நடைபெற்றது. 452 வாக்காளர்கள் கொண்ட இந்த வார்டிற்கான வாக்குப்பதிவு செல்லம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரியங்கா, சாந்தி, கனிமொழி, வளர்மதி உள்ளிட்ட நான்கு வேட்பாளர்கள் போட்டிட்டனர். இதில் மொத்தம் 403 வாக்குகள் பதிவாகின.

Tags:    

மேலும் செய்திகள்