தெருநாய்கள் கடித்து குதறியதில் 3 ஆடுகள் செத்தன

தெருநாய்கள் கடித்து குதறியதில் 3 ஆடுகள் செத்தன.

Update: 2022-07-10 18:54 GMT

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 43). விவசாயியான இவர் ஆடுகளையும் வளர்த்து வருகிறார். நேற்று காலை கந்தசாமியின் 3 ஆடுகள் அவரது தோட்டத்தில் உள்ள பட்டியில் கட்டி போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கந்தசாமி வெளியே சென்றிருந்த நிலையில், அவரது மனைவி குமுதம் ஆடுகளுக்கு தீவனம் வைத்து விட்டு, விறகு வெட்டுவதற்காக சென்று விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் வந்து பார்த்தபோது 3 ஆடுகளும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த வழியாக சுற்றித்திரிந்த தெருநாய்கள் கடித்து குதறியதில் 3 ஆடுகளும் இறந்தது விசாரணையில் தெரியவந்தது. அதில் 2 சினை ஆடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கால்நடைத்துறையும், குரும்பலூர் பேரூராட்சியும், பாளையம் கிராம நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது. இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் இருக்கும். எனவே அரசின் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கந்தசாமி குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குரும்பலூர் பேரூராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்