மேக் இன் இந்தியா போல் மேக் இன் தமிழ்நாடு உருவாகி வருகிறது- டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், மேக் இன் இந்தியா போல் மேக் இன் தமிழ்நாடு உருவாகி வருகிறது என கூறினார்
சென்னை,
2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இன்றும் நாளையும் நடைபெறும் மாநாட்டில் தென் கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். தேசிய அளவில் பிரபல தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன. மாநாட்டின் மூலம் ரூ.2.50 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பங்கேற்று உள்ளனர்.
மாநாட்டில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் பேசும் போது, முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்ற விவரத்தை நாளை நடக்கும் நிறைவு விழாவில் முதலமைச்சர் வெளியிடுவார் என கூறினார்.
டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் பேசும் போது, மேக் இன் இந்தியா போல் மேக் இன் தமிழ்நாடு உருவாகி வருகிறது. எளிதில் அணுகக்கூடியவராகவும், சிறப்பாக செயல்படுபவராகவும் முதலமைச்சர் பழனிசாமி திகழ்கிறார். தமிழகத்தில் 37,000 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. எரிசக்தி, ஆட்டோமொபைல், காற்றாலை மின்சாரம், ஜவுளி, லெதர் என பல துறைகளில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறந்து விளங்குகிறது என கூறினார்.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பான் பிரதிநிதி பேசும் போது கூறியதாவது:- அக்டோபர் முதல் சென்னை - டோக்கியோவிற்கு ஜப்பான் ஏர்லைன்ஸ் மூலம் விமான சேவை தொடங்கும்.
புதிய வெளிவட்ட சாலை திட்டங்களிலும் ஜப்பான் ஈடுபடுகிறது
மெட்ரோ இரண்டாவது திட்டத்திற்கும் ஜப்பான் நிதியுதவி அளிக்கும் என கூறினார்.