தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதியிழப்பு நடவடிக்கை எடப்பாடி அரசுக்கு சாதகமா?

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டால் அது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சாதகமாக முடியும் எனக் கூறப்படுகிறது.

Update: 2017-09-15 09:59 GMT
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை குறித்து இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகருடன் முதல் அமைச்சர்  ஆலோசனை நடத்தினர்.  ஆலோசனை கூட்டத்தில்  ஓ.பன்னீர் செல்வம் , அரசு வக்கீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டால்  அது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சாதகமாக முடியும் எனக் கூறப்படுகிறது. இதற்கு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் உத்தராகண்டில் நடைபெற்ற நிகழ்வு  ஒன்றை உதாரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

உத்தராகண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 9 பேர் பாஜகவுக்கு ஆதரவளித்ததால் அவர்களை தகுதி நீக்குவதாக சபாநாயகர் கோவிந்த் சிங் குஞ்ச்வால் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இதையடுத்து முதலமைச்சர் ஹரீஷ் ராவத் பேரவையில் நடத்த‌விருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தகுதியிழப்பு செய்யப்பட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பங்கேற்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

இது தொடர்பான வழக்கில் உத்தராகண்ட் ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்  இரண்டுமே தகுதி நீக்கப்பட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது என உத்தரவிட்டன. இதையடுத்து‌ ஹரீஷ் ராவத் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்