சிவாஜி கணேசனுக்கு புதிய சிலை மகன்கள் ராம்குமார், பிரபு பேட்டி

சிவாஜி கணேசனுக்கு புதிய சிலை அமைக்க முயற்சி செய்வோம் என்று அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் தெரிவித்தனர்.

Update: 2017-08-03 21:30 GMT
சென்னை,

சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது குறித்து அவருடைய மகன்கள் ராம்குமார், நடிகர் பிரபு ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:–

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி சிலையை அகற்றி இருக்கிறார்கள். கோர்ட்டு உத்தரவை மதிக்க வேண்டியது கடமை. எனவே அரசின் நடவடிக்கையை ஏற்கிறோம். கடற்கரை சாலையில் தலைவர்கள், அறிஞர்கள், புலவர்கள் மற்றும் உழைப்பாளர் சிலைகள் உள்ளன. அந்த வரிசையில் நடிப்புக்கு பெருமை சேர்த்த சிவாஜி கணேசனுக்கு சிலை அமைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் இந்த வேண்டுகோளை வைத்து இருக்கிறார்கள்.

பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக இருந்தவர் சிவாஜி கணேசன். எனவே கடற்கரை சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர், மகாத்மாகாந்தி ஆகியோரது சிலைகளுக்கு நடுவில் சிவாஜி கணேசனுக்கு புதிய சிலை அமைக்கும் முயற்சியை சிவாஜி ரசிகர் மன்றம் மூலம் நாங்கள் செய்வோம்.

இதற்கான அனுமதியை சட்டப்பூர்வமாக அரசிடம் பெற வற்புறுத்துவோம். எங்கள் குடும்பத்தினரும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்