தொடர்வண்டித்துறை பணியிடங்கள் கேரளாவுக்குத் தாரைவார்க்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்

தமிழகத்திற்கான தொடர்வண்டித்துறை பணியிடங்கள் கேரளாவுக்குத் தாரைவார்க்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2024-10-26 01:37 GMT

கோப்புப்படம்

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தென்னகத் தொடர்வண்டித்துறையின் தமிழ்நாட்டிற்கான காலிப் பணியிடங்கள் கேரளாவின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ், முழுக்க முழுக்க கேரள மாநிலத்தவர்களைக் கொண்டு நிரப்பப்படுவதால், தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் கீழ் இயங்கும் தொடர்வண்டித்துறை மேற்கு, கிழக்கு, தெற்கு, கொங்கன் உள்ளிட்ட 19 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றின் காலிப்பணியிடங்கள் 21 தேர்வு வாரியங்கள் மூலம் நிரப்பப்படுகின்றன.

தென்னகத் தொடர்வண்டித்துறை சென்னை, திருச்சி, சேலம், மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு என்று 6 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, சேலம் கோட்டங்களில் உருவாகும் காலிப்பணியிடங்கள் சென்னை தேர்வு வாரியம் மூலமும், மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் உருவாகும் காலிப்பணியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலமும் நிரப்பப்படுகின்றன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை கோட்டம், கேரளாவின் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படுவதால் மதுரை கோட்டத்திற்குட்பட்ட தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உருவாகும் காலிப்பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலைவாய்ப்பினைப் பெற முடிவதில்லை. மாறாக, தமிழ்நாட்டின் காலிப்பணியிடங்கள் தமிழ்த் தெரியாத கேரள மாநிலத்தவரால் முழுவதுமாக நிரப்பப்படுகிறது.

நடப்பாண்டில் 3116 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தென்னகத் தொடர்வண்டித்துறை அறிவித்துள்ள நிலையில், சென்னை தேர்வு வாரியத்தின் மூலம் 2406 பணியிடங்களும், திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தின் கீழ் 755 பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளது. திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தால் நிரப்பவுள்ள 755 காலிப்பணியிடங்களில் மதுரை கோட்டத்திற்குச் சொந்தமான ஏறத்தாழ 300 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த 300 காலிப்பணியிடங்கள் தமிழர்களுக்குப் பதிலாக மலையாளிகள் மூலம் நிரப்பப்படுவது அப்பட்டமான தமிழர் உரிமைப்பறிப்பாகும். தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இத்துரோகத்தை இனியும் அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள பாரத மிகுமின் நிறுவனம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் முதல் வங்கி, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட நிர்வாக அலுவல்களிலும், குடிமைப்பணிகளிலும் வேற்றுமாநிலத்தவர் ஆதிக்கமே மேலோங்கியுள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டி பணிகளிலும் வேலைவாய்ப்பு உரிமை பறிபோவது சகிக்க முடியாதப் பெருங்கொடுமையாகும்.

ஏற்கனவே திருச்சி பொன்மலை தொடர்வண்டி பணிமனையில் பெருமளவில் வட மாநிலத்தவர் பணியமர்த்தப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி, தமிழ்த்தேசிய பேரியக்கம் உள்ளிட்ட தமிழ்த்தேசிய அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்த பிறகே தமிழர்களுக்குப் பணிவாய்ப்பு வழங்கப்பட்டது. ஆகவே, ஆளும் பா.ஜ.க அரசு உடனடியாக தென்னகத் தொடர்வண்டித்துறையின் மதுரை கோட்டத்தை, சென்னை தேர்வு வாரியத்தின் கீழ் இணைத்து தமிழ்நாட்டு பணியிடங்கள் தமிழர்களுக்கே என்ற அடிப்படை உரிமையை உறுதிசெய்ய வேண்டும். இல்லையென்றால் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தில் கூட்டணியுடன் சேர்த்து 40 உறுப்பினர்களின் பலம் கொண்ட தி.மு.க, மத்திய அரசிற்கு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உரிய அரசியல் அழுத்தம் கொடுத்து தமிழர் உரிமைப் பறிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்