எலக்ட்ரீசியனுக்கு 20 ஆண்டு சிறை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த எலக்ட்ரீசியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

Update: 2023-04-26 18:45 GMT

கடலூர்

மாணவி பலாத்காரம்

திருவாரூர் மாவட்டம் தியாகப்பெருமாநல்லூரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் சதிஷ்(வயது 25), எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் சதிஷ் தனது குடும்பத்துடன் கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பெரியபட்டில் தங்கியிருந்து எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வந்தார். அப்போது சிதம்பரம் அடுத்த சிவபுரி பகுதியை சேர்ந்த 16 வயதுடைய 11-ம் வகுப்பு மாணவி, மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயை பெரியப்பட்டில் உள்ள தர்காவுக்கு அழைத்து சென்றார். அப்போது சதிசுக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சதிஷ், மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வினதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதிசை கைது செய்தார்.

20 ஆண்டு சிறை

மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி நீதிபதி (பொறுப்பு) உத்தமராஜா, குற்றம் சாட்டப்பட்ட சதிசுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் அரசின் ஏதாவது ஒரு நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை 30 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்