தாய், மாமாவுக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தாய், மாமாவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-09-29 23:00 GMT

ஊட்டி

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தாய், மாமாவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பாலியல் தொல்லை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ஒரு பெண்ணுக்கு, 6 வயதில் மகள் இருக்கிறாள். அந்த சிறுமி, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இதற்கிடையில் வகுப்பறையில் சிறுமி சோர்வாக காணப்பட்டாள். இதை கவனித்த ஆசிரியை, அவளை அழைத்து விசாரித்தார்.

அப்போது, சிறுமிக்கு அவளது தாயின் சகோதரர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், அதுபற்றி தாயிடம் கூறியும் அவர் கண்டு கொள்ளாமல் இருந்ததும் தெரியவந்தது.

போக்சோ வழக்கு

உடனே ஆசிரியை, குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க ஊட்டி போலீசாருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான போலீசார், கடந்த 5-12-2018 அன்று சிறுமியின் தாய் மற்றும் மாமா மீது போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், ஜாமீனில் வெளியில் வந்தனர்.

சிறை தண்டனை

இந்த வழக்கு விசாரணை, ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சிறுமியின் தாய் மற்றும் மாமாவுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பு கூறினார்.

மேலும் தற்போது காப்பகத்தில் தங்கி படித்து வரும் சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ஸ்ரீதரன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் மாலினி பிரபாகர் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்