தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 163 வழக்குகளுக்கு தீர்வு

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 163 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-09-10 00:30 GMT

தேசிய மக்கள் நீதிமன்றம்

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், மக்கள் நீதிமன்றத்தில் சமரச பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்படுகிறது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம், பழனி, வேடசந்தூர், நிலக்கோட்டை, நத்தம் உள்ளிட்ட தாலுகா அளவிலான நீதிமன்றங்களில் என மொத்தம் 15 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.

வழக்குகள் தீர்வு

இதில் காசோலை வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், மோட்டார்வாகன விபத்துகளில் இழப்பீடு கோரும் வழக்குகள், விற்பனை வரி வழக்குகள், வருமானவரி வழக்குகள், சொத்து வரி வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் என மொத்தம் 2,500 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு வழக்கிலும் சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது. அதன்படி நேற்று ஒரே நாளில் மொத்தம் 2 ஆயிரத்து 163 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் தீர்வு தொகையாக ரூ.8 கோடியே 51 லட்சத்து 30 ஆயிரத்து 658 வழங்க உத்தரவிட்டது.

மாவட்ட நீதிபதி

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தலைமை தாங்கினார். மேலும் வழக்குகளில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்குவதற்கான உத்தரவுகளை வழங்கினார். இதில் நீதிபதிகள் கருணாநிதி, சரண், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகனா, நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்