2 உர விற்பனை நிலையங்களுக்கு தடை

உரக்கட்டுப்பாட்டு ஆணைப்படி செயல்படாத 2 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சக்திவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-10-11 19:35 GMT

சம்பா நெல் சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தில் மக்காச்சோளம், கரும்பு, நிலக்கடலை, உளுந்து மற்றும் தோட்டக்கலை பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். சம்பா நெல் நடவு பணிகளிலும், நெற்பயிருக்கு மேலுரம் இடுவதிலும் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே சாகுபடிக்கு தேவையான உரங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் யூரியா- 4,670 மெட்ரிக் டன், டி.ஏ.பி.- 1,687 மெட்ரிக் டன், பொட்டாஷ்- 860 மெட்ரிக் டன், காம்பளக்ஸ்- 5,423 மெட்ரிக் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விற்பனை தடை

இந்தநிலையில் சென்னை வேளாண்மை இயக்குனர் ஆணைப்படி, உர விற்பனை நிலையங்களில் சிறப்பு பறக்கும் படை குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ஐ சரியாக பின்பற்றாத 2 மொத்த விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக விற்பனை தடை விதித்து உத்தரவிடப்பட்டு, முறையாக பின்பற்றப்படாமைக்கான விளக்கம் கோரப்பட்டுள்ளது.

எனவே, மொத்த உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் உரிய அனுமதி பெற்ற இடங்களிலும் உரிய அனுமதி பெற்ற நிறுவனங்களிலிருந்து மட்டும் கொள்முதல் செய்ய வேண்டும். மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கு உரம் தவிர இதர இடுபொருட்களை தேவையில்லாமல் இணைத்து விற்கக்கூடாது. மேலும் பிற மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிடவும், பிற மாவட்டங்களிலிருந்து உரம் கொள்முதல் செய்வதும் கூடாது. இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உரக்கட்டுப்பாட்டு ஆணையின்படி, உரிமம் ரத்து செய்யப்படும்.

உரங்களின் இருப்பு விவரம்

சில்லறை உர விற்பனையாளர்கள் உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய விலை உரங்களை விற்பனை முனையக்கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் விவசாயிகளின் பார்வையில் படும்படி பராமரிக்க வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து வழங்கக்கூடாது. விவசாயிகள் இது குறித்து ஏதேனும் புகார் தெரிவிக்க தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அல்லது மாவட்ட உரக்கண்காணிப்பு மையத்தை 04322 -221666 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்