கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திய 2 பேர் கைது

அண்ணனுக்கு மது வாங்கி கொடுத்ததை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்கள் கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்தினர். இது தொடர்பாக அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-21 20:04 GMT

தேவகோட்டை,

அண்ணனுக்கு மது வாங்கி கொடுத்ததை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்கள் கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்தினர். இது தொடர்பாக அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மது வாங்கி கொடுத்ததை கண்டித்ததால்

தேவகோட்டை கம்பர் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன்கள் விக்னேஷ், பாலாஜி (வயது 35). இருவரும் கட்டிட தொழிலாளர்கள்.கடந்த சில மாதங்களாக விக்னேஷ் வீட்டில் சம்பளத்தை சரியாகக் கொடுக்காமல் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, விக்னேசுடன் வேலை பார்க்கும் அவரது நண்பர்களான ஜீவா நகரைச் சேர்ந்த அம்மாசி (32), அழகப்பன் (36) ஆகியோருடன் ஏன் என்னுடைய அண்ணனுக்கு மது வாங்கி கொடுத்து இப்படி பழகி வைத்து இருக்கிறீர்கள் என தட்டி கேட்டு உள்ளார். இதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

கத்திக்குத்து

இந்த நிலையில் நேற்று காலை பாலாஜி கட்டிட வேலைக்கு செல்வதற்காக வழக்கம்போல் தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகே சக தொழிலாளர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அம்மாசி, அழகப்பன் ஆகியோர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலாஜியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

.ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பாலாஜியை அங்கிருந்தவர்கள் மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல்நிலை மோசமானதால் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் தொடர்பாக தேவகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து அம்மாசி, அழகப்பன் 2 பேரையும் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்