திருமணகோஷ்டியினர் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து 13 பேர் காயம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமணகோஷ்டியினர் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-09-17 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருமண விழாவுக்கு

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வரதராஜ் மகன் ராமமூர்த்தி என்பவரின் திருமணம் இன்று காலை திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சிறுவனூர், கொங்கராயனூர், பனப்பாக்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த உறவினர்கள் சரக்குவானத்தில் திருவெண்ணெய்நல்லூருக்கு வந்தனர். பின்னர் திருமண விழா முடிந்ததும் அவர்கள் மீண்டும் அதே வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டனர். சிறுவானூர் கிராமத்தை சேர்ந்த ராகுல் என்பவர் வாகனத்தை ஓட்டினார்.

வாகனம் கவிழ்ந்தது

டி.எடையார் ஏரிக்கரை அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்த சிவா மகன் விஜயராஜ்(3), இவரது தாய் மருவரசி(24), பனப்பாக்கம் ராஜாங்கம் மனைவி ஜெயா(50), ஜெய்சங்கர் மனைவி உமா(35) மற்றும் புவனா, ஜெயந்தி, அய்யனார், ஜெயஸ்ரீ, தபஸ்ரீ உள்பட 13 பேர் காயம் அடைந்து வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டனர். உடனே இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்