10 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை

ஊட்டி, கூடலூரில் 10 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது என்று கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தெரிவித்தார்.

Update: 2023-08-06 21:30 GMT

கூடலூர்

ஊட்டி, கூடலூரில் 10 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது என்று கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தெரிவித்தார்.

ரேஷன் கடைகள்

நீலகிரி மாவட்டத்தில் தக்காளி கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 1 மாதத்துக்கு மேலாக தக்காளி விலை உச்சத்தில் உள்ளதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் பாதிப்படைந்து உள்ளனர். தக்காளி விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கிலும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கும் வகையிலும் ரேஷன் கடைகள் மூலம் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில், நீலகிரி மாவட்ட நுகர்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் நடத்தப்படும் ஊட்டி மேரீஸ் ஹில், காா்டன் ரோடு, கீரின் பீல்டு, தேவர்சோலை, பாம்பேகேசில் ஆகிய 5 ரேஷன் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது.

கிலோ ரூ.60-க்கு விற்பனை

இதேபோல் கூடலூா் தாலுகாவில் அத்திப்பாளி, செவிடிப்பேட்டை, மேல் கூடலூர் 1 மற்றும் 2, சூப்பர் மாா்க்கெட் ஆகிய 5 ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தக்காளி விற்பனை நேற்று முன்தினம் முதல் தொடங்கி உள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் ரூ.95 வரை மார்க்கெட்டில் இருந்து வாங்கி, அதனை ஒருவருக்கு ஒரு கிலோ வீதம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதல் நாளில் 327 கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் கூறும்போது, பொதுமக்களிடம் வரவேற்பை பொருத்து கூடுதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தக்காளியின் விலை குறையும் வரை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும். இதனை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்