'ராகுல்காந்தி தகுதியான தலைவர், சிறந்த பேச்சாளர் அல்ல' - விஜய் வடேடிவார் கூறுகிறார்

ராகுல்காந்தி ஒரு தகுதியான தலைவர், ஆனால் சிறந்த பேச்சாளர் அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேடிவார் கூறினார்.

Update: 2023-10-09 19:15 GMT

மும்பை, 

ராகுல்காந்தி ஒரு தகுதியான தலைவர், ஆனால் சிறந்த பேச்சாளர் அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேடிவார் கூறினார்.

சிறந்த பேச்சாளராக இருப்பதன் அவசியம்

புனேயில் பல்கலைக்கழகம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜய் வடேடிவார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர், அரசியலில் சிறந்த பேச்சாளராக இருக்க வேண்டியதன் அவசியத்தை மாணவர்கள் மத்தியில் விளக்கி பேசியதாவது:- அரசியலில் இருப்பவர்கள் நல்ல பேச்சாளராக இருக்க வேண்டியது முக்கியத்துவமானது. எங்களது கட்சி தலைவர் ராகுகாந்தி ஒரு தகுதிவாய்ந்த தலைவர். ஆனால் அவர் சிறந்த பேச்சாளர் அல்ல. நீங்கள் முதலில் சிறந்த பேச்சாளராக இருக்க வேண்டும். மக்கள் மத்தியில் உரையாற்றும்போது எடுத்துக்காட்டுகளை கூறி பேசுங்கள்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

எனது வயதுடைய தலைவர்கள் அரசியலில் ஒரு ஓரத்தில் நிறுத்தப்பட வேண்டும். இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தற்போது அரசியலில் 70, 80, 90 வயதுடையவர்கள் உள்ளனர். ஆனால் இளம் தலைமுறையினர் அரசியலில் அனுதிக்கப்பட வேண்டும். அவர்கள் பயிற்சி எடுத்து தயாராகி வருகிறார்கள். எனவே நாம் ஏன் அரசியலை நிறுத்திக்கொள்ள கூடாது. அரசியலில் தனித்துவம் என்னவென்றால், ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தங்களை இளைஞர்களாக கருதுகிறார்கள். நான் முதல் தடவை தேர்தலில் போட்டியிட்டபோது எனக்கு ரூ.78 ஆயிரம் கிடைத்தது. ஆனால் தேர்தலில் போட்டியிட எவ்வளவு பணம் தேவை என்று கேட்டு விடாதீர்கள். இதை தெரிவித்தால் என்னை தேர்தல் ஆணையம் பின்தொடர தொடங்கி விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்