இன்று மீண்டும் கூடும் நிலையில் நாடாளுமன்றத்தில் விவாதம் சுமுகமாக நடைபெறுமா?

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடும் நிலையில் சுமுக விவாதம் நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2024-07-01 03:34 GMT

புதுடெல்லி,

3-வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இதில் 27-ந் தேதி நடந்த இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.அதைத்தொடர்ந்து மறுநாளே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்குவதாக இருந்தது.

ஆனால் நீட் தேர்வு முறைகேடு குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசும் அளித்து இருந்தன. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவற்றை நிராகரித்ததுடன், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சினை குறித்து பேசலாம் என தெரிவித்தார்.

ஆனால் இதை ஏற்காத எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதைப்போல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் நீட் விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் பெரும்பாலும் முடங்கின.

எனினும் மாநிலங்களவையில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் தொடங்கியது. பா.ஜனதா எம்.பி. சுதான்ஷு திரிவேதி இந்த விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் பா.ஜனதா எம்.பி. கவிதா பதிதார் மற்றும் 9 உறுப்பினர்கள் பேசினர்.

இந்த நிலையில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் இன்று மீண்டும் இரு அவைகளிலும் தொடங்குகிறது. மக்களவையில் இந்த விவாதத்தை முன்னாள் மத்திய மந்திரி அனுராக் தாகூர் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அவரை தொடர்ந்து பா.ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜின் மகளும், புதிய உறுப்பினருமான பன்சூரி சுவராஜ் பேச உள்ளார்.

இந்த விவாதத்தில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. ஆனால் நீட் விவகாரம், உள்கட்டமைப்பு விபத்துகள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இதனால் இரு அவைகளிலும் சுமுக விவாதம் நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்