மேற்கு வங்காளத்தில் தொடரும் டாக்டர்கள் போராட்டம்...மருத்துவ சேவை பாதிப்பு

அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி பயிற்சி ஜூனியர் டாக்டர்கள் நேற்று காலை முதல் மீண்டும் 'முழு பணி புறக்கணிப்பு' போராட்டத்தை தொடங்கினர்.

Update: 2024-10-02 06:59 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர், கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்தனர்.

தொடர்ந்து கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின்படி, இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் ஆர்.ஜி.கார் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் உட்பட பலரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே கடந்த மாதம் 21ம் தேதி 42 நாட்களுக்கு பிறகு ஜூனியர் டாக்டர்கள், பேராட்டத்தை கைவிட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மட்டும் மேற்கொள்ளும் வகையில் பகுதியாக பணிக்குத் திரும்பினர். தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்வோம் என்று டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி பயிற்சி ஜூனியர் டாக்டர்கள் நேற்று காலை முதல் மீண்டும் 'முழு பணி புறக்கணிப்பு' போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து இன்றும் போராட்டம் தொடர்வதால் மேற்கு வங்காளத்தில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்