சிவசேனா கட்சி சின்னம் முடக்கத்தால் உத்தவ் தாக்கரேக்கு அணிக்கு பின்னடைவு

சிவசேனா கட்சி சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு எடுத்துள்ளது.

Update: 2022-10-09 06:46 GMT

மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த அரசியல் சூறாவளியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கினார். சிவசேனாவின் மொத்தம் உள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் 40 பேருடன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்-மந்திரி ஆனார் ஏக்நாத் ஷிண்டே.

இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனாவை உரிமை கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அளித்தது. அதில், நாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும், எங்களுக்கு தான் கட்சியின் வில் அம்பு சின்னத்தை தர வேண்டும் என்றும் கோரியது. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை, வில் அம்பு சின்னம் தொடர்பான ஏக்நாத் ஷிண்டே தரப்பின் கடிதத்தை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க தடை விதிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர்.

இது தொடர்பான மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு உத்தவ் தாக்கரே தரப்பினரின் மனுவை தள்ளுபடி செய்து சிவசேனா கட்சி சின்னத்தை உரிமை கோரி ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்த கடிதத்தை பரிசீலித்து முடிவு எடுக்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்படி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.

இந்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட உத்தரவில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைதேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும் கட்சியின் பெயரையோ அல்லது வில்- அம்பு சின்னத்தையோ பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணிக்கு மற்றொரு பின்னடைவாக கருதப்படுகிறது. அந்தேரி இடைத்தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. அதேநேரம் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் புதிய சின்னம் மற்றும் கட்சி பெயருடன் களம் இறங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். இதனால் மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்