ம.பி.யில் ஆம்புலன்ஸ் வராததால் நோயாளியை தள்ளுவண்டியில் அழைத்துச் சென்றதாக கூறிய நபருக்கு அதிகாரிகள் மிரட்டல்!

மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் தனது நோய்வாய்ப்பட்ட தந்தையை ஆம்புலன்ஸ் வராததால் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Update: 2022-08-22 05:12 GMT

ராய்ப்பூர்,

மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் தனது நோய்வாய்ப்பட்ட தந்தையை ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் கை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இதை பற்றிய செய்தியை வெளியிட்ட போது, ​​தவறான மற்றும் பொய்யான தகவலை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதாக கூறி மூன்று பத்திரிகையாளர்கள் மீது மத்தியப் பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

பிந்தைச் சேர்ந்த மூன்று பத்திரிகையாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ், ஏமாற்றுதல் மற்றும் பொதுத் தீங்கு விளைவித்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2008 இன் தொடர்புடைய விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு காவல்துறை சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் இந்த சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அந்த நபர் கூறுகையில், பல முறை முயற்சித்தும் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் கை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறினார்.இந்த வீடியோ ஆகஸ்ட் 15ம் தேதி  சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது மற்றும் பல்வேறு சேனல்கள் செய்திகளை வெளியிட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் சதீஷ்குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதன்பின் நடந்த விசாரணையில், இந்த செய்தி தவறானது என்பதை போலீஸ் கண்டறிந்தது மற்றும் சம்பந்தப்பட்ட குடும்பம் அனைத்து அரசாங்கத் திட்டங்களின் பலன்களைப் பெற்று வருதாக விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து, தபோ சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜீவ் கவுரவ் அளித்த புகாரின் அடிப்படையில் எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், விசாரணையில் வெளியானவை பொய் என்று பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் கூறுகின்றனர். "விசாரணையில் எங்களுக்கு எதிராக அறிக்கைகள் கொடுக்க அந்த நபரின் குடும்பத்துக்கு அரசு நிர்வாகத்தால் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது" என்று ஒரு பத்திரிகையாளர் கூறினார்.

மேலும், அரசாங்க அதிகாரிகள் சிலர் அந்த நபரின் வீட்டிற்குச் சென்று, அவர் பெற்றுவரும் அரசின் சலுகைகளைப் நிறுத்திவிடுவதாக மிரட்டினர் என்று அந்த நபர் பேசிய வீடியோ ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது.

மேலும் தன்னிடம் அதிகாரிகள் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கிச் சென்றதாகவும் அந்த நபர் கூறினார். ஊடகங்களில் இதை பற்றி எதுவும் பேசக்கூடாது என்று மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால், அந்த வீடியோவில் அவர் கூறுவது போல், செய்தியாளர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக அதிகாரிகளால் அந்த நபரின் குடும்பத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதா என்பது வீடியோவில் சொல்லப்படவில்லை.

தற்போது மூன்று பத்திரிகையாளர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க பிந்த் சரக போலீஸ் சூப்பிரண்டு ஷைலேந்திர சிங் சவுகான் மறுத்துவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்