விபத்து ஏற்படுத்திய அரசியல் பிரமுகர் மகன்; அடைக்கலம் கொடுத்த காதலி... மராட்டிய முதல்-மந்திரி கூறுவது என்ன?

மராட்டியத்தில் விபத்து ஏற்படுத்திய பின் கார் ஓட்டுனர், மிஹிர் ஷா இருவரும் காரை சாலையோரம் விட்டு விட்டு, தனித்தனியாக ஆட்டோக்களில் தப்பியுள்ளனர்.

Update: 2024-07-07 15:17 GMT

புனே,

மராட்டியத்தின் ஒர்லி நகரில் கொலிவாடா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் நகவா (வயது 50). இவருடைய மனைவி காவேரி நகவா (வயது 45). வழக்கம்போல் இன்று காலை 5.30 மணியளவில் இவர்கள் இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் மீன் வாங்க சென்றனர்.

இந்நிலையில், அவர்கள் மீன் வாங்கி கொண்டு திரும்பி வரும்போது, பின்னால் வந்த பி.எம்.டபிள்யூ. ரக சொகுசு கார் ஒன்று இவர்களுடைய ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பிரதீப் தரையில் விழுந்த நிலையில், காவேரி காரில் 100 மீட்டர் தொலைவு வரை இழுத்து செல்லப்பட்டு உள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில், காரை குடிபோதையில் ஓட்டி சென்றது முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் துணை தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷா என்பவரின் மகன் மிஹிர் ஷா (வயது 24) என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் நடந்ததும் அவர் தப்பியோடி விட்டார். இதுபற்றி ராஜேஷ் ஷா மற்றும் அவருடைய கார் ஓட்டுநர் ராஜ்ஸ்ரீ பிஜாவத் ஆகியோரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, ஜுகுவில் உள்ள பார் ஒன்றில் மிஹிர் ஷா நேற்றிரவு மதுபானம் குடித்து இருக்கிறார். அவர் வீடு திரும்பும்போது, ஓட்டுநரிடம் நீண்ட தொலைவுக்கு காரை ஓட்டி செல்லும்படி கூறியுள்ளார்.

கார் ஒர்லிக்கு வந்ததும், காரை ஓட்டுகிறேன் என மிஹிர் கூறியுள்ளார். இதனால், கார் ஓட்டுநர் பயணிகள் அமர கூடிய பின் இருக்கைக்கு சென்று அமர்ந்து இருக்கிறார். அதன்பின்னர் காரை அதிவிரைவாக ஓட்டி சென்ற மிஹிர் ஸ்கூட்டர் மீது மோதியுள்ளார்.

இந்த விபத்துக்கு பின் மிஹிர் ஷா தப்பியோடி விட்டார். அவருக்கு, அவருடைய காதலி அடைக்கலம் கொடுத்திருக்க கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் தப்பி, ஒளிந்து கொள்ள உதவியிருக்க கூடும் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

சம்பவத்திற்கு பின்பு, குற்றவாளிகளான மிஹிர் ஷா மற்றும் அவருடைய ஓட்டுனர், பந்திரா கிழக்கு பகுதியில் உள்ள கலா நகருக்கு தப்பி சென்றுள்ளனர். அவர்கள் காரை சாலையோரம் விட்டு விட்டு, தனித்தனியாக ஆட்டோக்களில் தப்பியுள்ளனர். ஓட்டுநர் போரிவாலி பகுதிக்கு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது என கூறியுள்ள முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, சட்டம் அதன் கடமையை செய்யும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். போலீசாரிடம் பேசியுள்ளேன். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில், மிஹிர் ஷா இருக்கும் இடம் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். புதிய குற்ற சட்டத்தின் கீழ் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்