தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது; கிராம மக்கள் மகிழ்ச்சி

கார்கலா அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-08-21 14:59 GMT

மங்களூரு;

சிறுத்தை தொடர் அட்டகாசம்

உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா பெலகோடி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தை அடிக்கடி வெளியேறி கிராமத்தில் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

மேலும் கிராமத்தில் உள்ள ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி கொன்று தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வந்தனர்.

மேலும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அங்கு இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர்.

கூண்டில் சிக்கியது

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து இரை தேடி வந்த சிறுத்தை, அந்த கூண்டுக்குள் வசமாக சிக்கிக் கொண்டது. இதுபற்றி அறிந்ததும் கிராம மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்போில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

சிறுத்தை கூண்டில் சிக்கிய சம்பவம் அறிந்ததும் பெலகோடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டுடன் லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.

அந்த சிறுத்தையை சிவமொக்காவில் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் கொண்டு விட்டனர். தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை சிக்கியதால் பெலகோடி கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்