கர்நாடகாவில் நிலச்சரிவு: 6 பேர் உயிரிழப்பு

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் எடுத்து உள்ள நிலையில், இருவேறு இடங்களில் நடைபெற்ற நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-08-02 13:10 GMT

மங்களூரு,

கர்நாடகத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தான் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு முதலில் மழை பெய்யவில்லை. அதன்பின்னர் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. மராட்டியத்தில் பெய்த கனமழையால் வடகர்நாடகத்திலும் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கர்நாடகத்தில் மீண்டும் கனமழை தீவிரம் எடுத்து உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பியில் கனமழை பெய்து வருகிறது. இதுதவிர மலைநாடு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவிலும் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த நிலையில் உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் தாலுகா படுசிராலி, முண்டள்ளி, கோக்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு விடிய,. விடிய கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் முண்டள்ளி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மண்சரிந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீட்டிற்குள் இருந்த 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அதேபோல், தட்சின கன்னடாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்