'ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர்' - ராகுல் காந்தி

ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-09 22:41 GMT

புதுடெல்லி,

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர். அவர் வணிகம் மற்றும் தொண்டு ஆகிய இரண்டிலும் அழியாத முத்திரையை பதித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்தியாவின் விலைமதிப்பற்ற மகனை இழந்துவிட்டோம். இந்தியாவின் உள்ளார்ந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்புடன் ரத்தன் டாடா செயலாற்றினார். அவர் லட்சக் கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாகவும், அடையாளமாகவும் இருந்தார். தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை வழங்கினார். அவரது அன்புக்குரியவர்களுக்கும், அன்பர்களுக்கும் எமது அனுதாபங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்