தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2024-06-26 17:33 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைத்துள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், எம்.பி.யாக நேற்று முன்தினம் பதவியேற்று கொண்டனர். அவர்களில் மீதமிருந்தவர்கள் நேற்று எம்.பி.க்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அரசியல் சாசன நகல் ஒன்றை கையில் பிடித்தபடி எம்.பி.யாக நேற்று பதவியேற்று கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் இயற்றியது. இதனை ராகுல் காந்தி ஏற்று கொண்டார். இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நன்றி... ஒவ்வொரு இந்தியரின் குரலும் ஒலிக்கும்போது நமது ஜனநாயகம் வலுவடைகிறது. இது நமது கூட்டு இலக்கு மற்றும் கடமை ஆகிய இரண்டும் ஆகும்" என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்