பஞ்சாப்: பாகிஸ்தான் எல்லை அருகே சீன டிரோன் கண்டெடுப்பு

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் கைப்பற்றப்பட்டது.

Update: 2024-07-20 16:15 GMT

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைப்பகுதி அருகே எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எல்லை தாண்டி டிரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளது.

பின்னர் அந்த டிரோன் கேம்கரன் என்ற கிராமத்தில் உள்ள வயல்வெளியில் விழுந்துள்ளது. இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் அந்த டிரோனை கைப்பற்றினர். அதனை ஆய்வு செய்தபோது, அது சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் என்பது தெரியவந்தது.

அந்த டிரோன் எதற்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த 13-ந்தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாசில்கா மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்