அதிநவீன வசதிகளுடன் கூடிய நாட்டின் 4-வது வந்தே பாரத் விரைவு ரெயில் - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்!

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன மோதல் தவிர்ப்பு அமைப்பு பாதுகாப்பு அம்சங்கள் இந்த ரெயிலில் இணைக்கப்பட்டுள்ளன.

Update: 2022-10-13 09:10 GMT

உனா,

பிரதமர் மோடி இமாசல பிரதேச மாநிலத்திற்கு இன்று வருகை தந்தார். இதனை தொடர்ந்து, நாட்டின் 4-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை கொடியசைத்து அவர் இன்று காலை தொடங்கி வைத்தார்.

நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் நான்காவது வந்தே பாரத் ரெயில் இதுவாகும் முந்தைய ரயில்களுடன் ஒப்பிடும் போது இது மேம்பட்ட பதிப்பாகும் இந்த வந்தே பாரத் ரெயில் மிகவும் இலகுவானது மற்றும் குறைந்த நேரத்தில் அதிக வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

இந்த ரெயில் டெல்லி மற்றும் இமாசல பிரதேசத்தின் உனா நகரின் அம்ப் அன்தவுராவுக்கும் இடையே இயக்கப்படுகிறது. உனாவிலிருந்து புது டெல்லிக்கு பயண நேரம் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும்.


வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் புதிய வடிவமைப்பில், காற்றைச் சுத்திகரிப்பதற்கான புற ஊதா காற்று சுத்திகரிப்பு அமைப்பு கூரைப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.சண்டிகரில் உள்ள மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு பரிந்துரைத்தபடி, புதிய காற்றில் வரும் கிருமிகள், பாக்டீரியா தொற்றுகள் போன்றவற்றிலிருந்து காற்றை வடிகட்டி சுத்தம் செய்ய இந்த அமைப்பு கூரையின் இரு முனைகளிலும் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

இந்த வந்தே பாரத் ரெயில் 52 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும்.இந்த வந்தே பாரத் ரெயில் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 392 டன் எடை கொண்டதாக இருக்கும்.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு அமைப்பு - கவச் உள்ளிட்ட மேம்பட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இந்த ரெயிலில் இணைக்கப்பட்டுள்ளன.இது தேவைக்கேற்ப வை-பை உள்ளடக்க வசதியையும் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு பெட்டியிலும் 32 இன்ச் திரைகள் பயணிகளின் தகவல்களை வழங்கும் பயணம் வசதியாக இருக்கும். அனைத்து வகுப்பு பயணிகளுக்கும், ஒரு பக்க சாய்வு இருக்கை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. எக்ஸிகியூட்டிவ் பெட்டிகளில் 180 டிகிரி சுழலும் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது விமானம் போன்ற பயண அனுபவங்களை வழங்குகிறது. இதுபோன்ற மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்