ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய ஆக்கி அணியினரின் குறிப்பிடத்தக்க செயல்பாடு, ஈடு இணையற்ற மனவுறுதி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளன என பிரதமர் மோடி வாழ்த்தில் குறிப்பிட்டு உள்ளார்.

Update: 2024-09-17 17:17 GMT

ஹூலுன்பியர்,

6 அணிகள் இடையிலான 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இதேபோன்று, மற்றொரு அரையிறுதியில் சீனா, 2-0 என்ற கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாகிஸ்தானை வீழ்த்தி, முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. இந்நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - சீனா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி இந்திய அணியின் ஜுக்ராஜ் சிங் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

பதில் கோல் அடிக்க சீனா தொடர்ந்து முயற்சித்தும் அதில் பலனில்லை. இதனால், இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார். அணியினரின் குறிப்பிடத்தக்க செயல்பாடு, ஈடு இணையற்ற மனவுறுதி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளன என அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்