நீட் தேர்வு முடிவுகளை ரத்துசெய்யக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வலியுறுத்தல்

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்துசெய்வதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2024-07-05 11:35 GMT

புதுடெல்லி,

நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் நடைபெற்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் மதிப்பெண்ணை ரத்துசெய்யவேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் சுப்ரீம் கோர்ட்டில் முன்வைக்கப்பட்டன. இவை அனைத்திற்கும் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. வரும் 8-ந்தேதி இந்த வழக்கின் விரிவான விசாரணை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், நடந்து முடிந்துள்ள நீட் தேர்வை ரத்துசெய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மேலும் மத்திய அரசு தெரிவிக்கையில்,

* நீட் தேர்வு முடிவுகளை ரத்துசெய்யக்கூடாது.

* நடந்து முடிந்த நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததற்கு ஆதாரமில்லை.

* நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்துசெய்வதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

* நீட் தேர்வு முறைகேடு புகார்களை விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளோம்.

* தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமாகவும் நடைபெற புதிய சட்டத்தை இயற்றியுள்ளோம்.

* நியாயமற்ற வழிமுறைகள் தொடர்பான குற்றங்களுக்கு கடும் தண்டனையை சட்டம் அளிக்கும்.

* தேர்வுகளை திறம்பட நடத்த, பரிந்துரைகளை அளிக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்