முகேஷ் அம்பானியின் இளைய மகன் திருமணம்: மும்பையில் குவியும் பிரபலங்கள் மற்றும் தலைவர்கள்

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் இன்று மும்பையில் ஆடம்பரமாக நடைபெற உள்ளது.

Update: 2024-07-12 07:03 GMT

மும்பை,

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல இந்திய தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி-நீடா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற 2 மகன்களும், இஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானியின் திருமணங்கள் மிகவும் ஆடம்பரமாக நடந்தன.

இந்தநிலையில் முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழில் அதிபர் விரேனின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதில் உலகமே வியக்கும் வகையில் திருமணத்துக்கு முந்தைய வைபவங்கள் கடந்த மார்ச் மாதம் 3 நாட்கள் அம்பானி குடும்பத்தின் சொந்த ஊரான குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் நடந்தது. இதில் உலக பிரபலங்கள் உள்பட சுமார் 1,200 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்துக்கு முந்தைய வைபவங்கள் கடந்த 1½ ஆண்டாக அவ்வப்போது நடந்து வந்த நிலையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணம் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை பாந்திரா-குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்சன் சென்டரில் நடக்கிறது.

 

சுமார் 18.5 ஏக்கரில் உள்ள மும்பை ஜியோ வேர்ல்டு சென்டர், பிபா கால்பந்து மைதானத்தை விட 12 மடங்கு பெரியதாகும். நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 10 மடங்கு பெரியதாகும். இதில் 5 அரங்குகள், 25 சந்திப்பு அறைகள் அடங்கி உள்ளது. இங்கு வெகு விமரிசையாக திருமண விழா நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) மணமக்களுக்கு விருந்தினர்கள் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் திருமண வரவேற்பு நடக்கிறது. 14-ந்தேதி மங்கள் உத்சவ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெறும் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க ரியாலிட்டி டிவி நட்சத்திரங்கள் கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரி க்ளோ கர்தாஷியன் ஆகியோர் நேற்று மும்பை வந்தனர். அவர்கள் இருவருக்கும் நட்சத்திர ஓட்டலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கிம் கர்தாஷியனின் காரை புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்து கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள அவர் ஹாய் இந்தியா என்று குறிப்பிட்டுள்ளார். இன்று நடைபெறம் திருமண நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் பங்கேற்க உள்ளனர்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காலை முதலே மும்பையில் அரசியல் தலைவர்கள், பெரும் தொழில் அதிபர்கள் மற்றும் உலகின் பெரும் பணக்காரர்கள், வெளிநாட்டு பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என பலர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மத்திய விவசாயத்துறை மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்- மந்திரி பவன் கல்யாண், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி, இங்கிலாந்து முன்னாள் பிரதமர்கள் டோனி பிளேயர், போரிஸ் ஜான்சன், இத்தாலி முன்னாள் பிரதமர் மேட்டியா ரென்சி, கனடா முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நசீத், ஆஸ்திரியா முன்னாள் பிரதமர் செபாஸ்டியன் உள்பட பல நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், அபிசேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், சல்மான்கான், ஷாருக்கான், அக்ஷய்குமார், தீபிகா படுகோனே, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். உலக குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் பங்கேற்க உள்ளனர்.

ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களுக்காக 100-க்கு மேற்பட்ட தனியார் விமானங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கான வாடகை செலவு மட்டும் சுமார் ரூ.2 ஆயிரத்து 500 கோடி ஆகும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்