மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் நிதிஷ்குமார் பரபரப்பு பேட்டி

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறினார்.

Update: 2023-06-16 23:15 GMT

பாட்னா, 

நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பொது தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து, ஒரே வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் முழுவீச்சில் இறங்கி உள்ளார். அவர் எதிர்க்கட்சி தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார்.

இந்த நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை அவர் வருகிற 23-ந் தேதி கூட்டி உள்ளார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், சிவசேனா (உத்தவ்) தலைவருமான உத்தவ் தாக்கரே, உ.பி. முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுத்து, தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.

இது ஒருவகையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு கலக்கத்தை அளித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் பாட்னாவில் நிதிஷ்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

நிகழ்ச்சி ஒன்றில் நான் பேசுகையில் மக்களவைக்கு முன்கூட்டியேகூட தேர்தல் வரலாம் என கூறியது பற்றி கேட்கிறீர்கள். மத்திய பா.ஜ.க. அரசுக்கு எப்போதுமே இந்த விருப்பம் இருக்கிறது. 2004-ம் ஆண்டு, அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் ஆதரவாக இல்லாதபோதும்கூட, முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது.

இருந்தாலும் நான் மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என அப்போது கூறியது வேடிக்கையாகத்தான். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் கூட்டணி வலுப்பெற்றுவிட்டால் என்னாவது? இது அவர்களுக்கு பேரிழப்புகளைத் தரும். எனவே அவர்கள் முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்