கொல்கத்தா பெண் டாக்டர் கொலை சம்பவம்: பணியாளர்கள், மூத்த டாக்டர்கள் கூண்டோடு ராஜினாமா

டாக்டர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் பயிற்சி டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-10-08 09:23 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. இதனால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

மேலும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் பயிற்சி டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பயிற்சி பெண் டாக்டர் கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் மூத்த டாக்டர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்