இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாக். பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

Update: 2023-07-11 13:35 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன்பிரதேசம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதி வழியாக பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சிப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து ராணுவம் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரஜோரியின் நவ்ஷாரா பகுதியில் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.

உடனடியாக பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்ற நிலையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும், 2 பயங்கரவாதிகளுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அந்த 2 பேரும் காட்டிற்குள் தப்பிச்சென்றனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் துப்பாக்கி, தோட்டாங்கள், கையெறி குண்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்