நாட்டின் தூய்மையான நகரம்; தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பிடித்து இந்தூர் சாதனை

நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

Update: 2022-10-01 12:25 GMT

புதுடெல்லி,

தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்‌ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். இதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 5 முறை தூய்மை நகரங்களில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தூர் தொடர்ந்து 6-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

இதன் மூலம் 'ஸ்வஸ் சர்வேக்‌ஷான்' தூய்மை நகரத்திற்கான விருதை இந்தூர் தொடர்ந்து 6-வது முறையாக வென்றுள்ளது. முதல் இடம் பிடித்துள்ள இந்தூருக்கு வெற்றிக்கான விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு மத்தியபிரதேச அரசு அதிகாரிகளிடம் வழங்கினார்.

இந்தூருக்கு அடுத்தபடியாக தூய்மையான நகரங்கள் பட்டியலில் குஜராத்தின் சூரத் 2-வது இடத்தையும், மராட்டியத்தின் நவி மும்பை 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 'ஸ்வஸ் சர்வேக்‌ஷான்' திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் மத்திய பிரதேசம் முதல் இடத்தையும், சத்தீஸ்கர் 2-வது இடத்தையும், மராட்டியம் 3-வது இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்