காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவை கர்நாடக அரசு அதிகரித்துள்ளது.

Update: 2024-07-17 11:08 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை கர்நாடக அரசு அதிகரித்துள்ளது.

மொத்தம் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் தற்போது 110.60 அடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 36,675 கன அடியாக உள்ள நிலையில், அந்த அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 651 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் கபினி அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 45,651 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்