மங்களூரு அரசு கல்லூரியில் ஹிஜாப்புக்கு அனுமதி மறுத்ததால் 15 மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு

கர்நாடகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

Update: 2022-05-27 19:28 GMT

மங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கர்நாடக அரசு பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு அரசின் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டது. ஆனால் ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி சில முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வந்தனர். சில மாணவிகள் தேர்வையும் புறக்கணித்து சென்றனர். இதையடுத்து சில நாட்கள் கழித்து ஹிஜாப் விவகாரம் போய் இந்து கோவில்களில் வியாபாரம், ஹலால் விவகாரம் எழுந்தது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மங்களூரு பல்கலைக்கழகத்திற்கு சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். அவர்களை, பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. ஹிஜாப் அணிந்து வந்ததை கண்டித்து ஏ.பி.வி.பி. மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மங்களூரு வி.வி. அரசு கல்லூரியில் நேற்றும் 15 மாணவிகள் வகுப்புக்கு வந்துள்ளனர். ஆனால் நிர்வாகம் அனுமதிக்க மறுத்ததால் அவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு சென்றனர். இதுபற்றி கல்லூரி முதல்வர் டாக்டர் அனுசுயா ராய் தெரிவித்ததாவது:-

கல்லூரியில் 44 முஸ்லிம் மாணவிகள் படிக்கின்றனர். இவர்களில் 15 மாணவிகள் மட்டுமே ஹிஜாப் குறித்து பிரச்சினை எழுப்பி வருகின்றனர். மற்ற மாணவிகள் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்பில் ஆஜராகினர். இந்த பிரச்சினை தொடர்பாக முடிவெடிக்க ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்