கேரளாவில் கனமழை; கபினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த யானைகள்

கபினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு யானைகள் சிக்கித் தவித்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

Update: 2024-06-30 10:44 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கேரளா-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த வனப்பகுதி வழியாக கபினி ஆறு பாய்ந்தோடுகிறது.

இந்த நிலையில், கனமழை காரணமாக கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு சென்று கொண்டிருந்த ஒரு தாய் யானை மற்றும் ஒரு குட்டி யானை ஆகியவை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் இரண்டு யானைகளும் சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டன.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், வெள்ளப்பெருக்கு காரணமாக யானைகளுக்கு உதவி செய்ய முடியாத சூழலில் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இதனிடையே நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் இரண்டு யானைகளும் பத்திரமாக மறுகரைக்கு சென்று சேர்ந்தன. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்